Tag Archives: நவராத்திரி
நவராத்திரி விழா(விரதம்) – கரு(த்து)
பக்தி நிலை ஒழுகுவார்க்கு, அவர்தம் பாங்கிலே விளக்கினோம். அந்நிலை கடந்து அடுத்த நிலையிலுள்ளார்க்கு இப்பொழுதே இயம்புவாம்.
“எங்கெங்கு காணிணும் சக்தியடா”, என்றான் பாரதி.
நவராத்திரி வழா(விரதம்) இருப்பதன் தத்துவம் என்ன?
முதலில் (விந்து, அண்ட)சக்தியால் தோன்றிய உயிர், தன்னைப் உண்டாக்கிய(படைத்த) சக்தியை வணங்குதலாம். அப்பொழுது விரதம் இருந்து விந்து சக்தியடக்கி, சக்தியை வளர்த்துக் கொள்ளல் வேண்டும்.
திருமந்திரம்:
“பிறப்பை யறுக்கும் பெருந்தவம் நல்கும்
மறப்பை யறுக்கும் வழிபட வைக்கும்
குறப்பெண் குவிமுலை கோமள வல்லி
சிறப்பொடு பூசனை செய்யநின் றார்க்கே.”
குறப்பெண்ணாம், குவிமுலை கோமளவல்லியாம் ஆதி பராசக்தி, சிறப்பொடு பூசை செய்தவர்களுக்கு, பிறப்பையறுத்து, பெருந் தவத்தைக் கொடுத்து, இறைவனை மறக்கும் மறப்பையும் அறுத்துத் தன்னையும் தலைவனையும் வழிபட வைப்பாள்.
பக்தி நிலையிலுள்ளார்க்கு, அம்மையின் குணநலன்களை உருவகித்து உருவமாக்கி அதை அலங்கரித்து, பூசை செய்யும் வழிகளையும் சொன்னோம். அம்மையை எந்நிலையில் வேண்டுமானாலும் அலங்கரித்து எந்த நாளிலும் பூசை செய்யலாம். மூலசக்தி ஒன்றே; உருவில் வேறுபட்டாலும் கருவில் ஒன்றே! எந்தப் படையலை வேண்டுமாகிலும் இடலாம்; ஏனெனில் “ஆவி உனக்கு – அமுது எனக்கு” என்றுதான் படையல் இடுகிறோம். எந்த இராகத்தில் வேண்டுமாகிலும் இறைசக்தியைத் துதிக்கலாம். ஏனெனில் இசைக் கலை இறைவன் தந்தது.
அந்நிலை கடந்தோர் சக்திகெட்டு சாயம் வெளுத்துப் போய்விடாமல் இருக்கத் தங்கள் நிலையில் நின்று சக்தியடக்கித் தவம் செய்து பலனடையுங்கள்.
சக்திகெட்ட மனிதனுக்குத் தரணி வாழ்வு ஏதடா?
நவராத்திரி – ஒன்பதாம் நாள்
பராசக்தியை ஒன்பதாம் நாள் பிரமி(பெருமி – ப்ரம்மி)யாகக் கருதி வழிபாடு செய்யவேண்டும். பிரமி பிரமனின்(படைப்புக் கடவுள்) சக்தி.

சரசுவதியும் (சரசு=குளம்; வதி=வசிப்பவள்) இவளே. அன்னமிழுக்கும் விமானத்தில் பயணிக்கும் இவள் வெள்ளைத் தாமரைப்பூவில் ஞானத்தின் உருவமாக இருப்பவள். இவளுக்குப் பிடித்த ஆசனம் தர்ப்பைப் புல்.
சிம்ம வாகனம். வேதாரண்யத்தில் “யாழைப் பழித்த மொழியாள்” என்னும் பெயருடன் அம்மை வீற்றுள்ளாள்.
“கல்விக்கதிபதியான சரசுவதியை முறையுடன் மனமாற வேண்டுபவருக்கு, தேன்,பால்,திராட்சை போன்ற இனிய சொற்கள் சித்தியாகும்; காவியம் போற்றும் நாயகனாகத் திகழ்வார்;” என சவுந்தரிய லகரி 15ம் செய்யுள் கூறும்.
தஞ்சை மாவட்டம் கூத்தனூரில் இவ்வம்மைக்குத் தனிக் கோயில் உண்டு.

படையல்: கொண்டைக் கடலை சுண்டல்
துதிக்கவேண்டிய இராகம்: வசந்தா
நவராத்திரி தொடர் முற்றிற்று.
நவராத்திரி – எட்டாம் நாள்
எட்டாம் நாளில் அம்மையை நரசிம்மியாக அலங்காரம் செய்து பூசிக்கவேண்டும். அன்னை மகாலட்சுமிதான் நரசிம்மி. இரணியனை வதைத்த நரசிம்மத்தின் சக்திதான் நரசிம்மி. அவருக்குண்டான சக்திகளும், ஆயுதங்களும் அம்மைக்கு உண்டு. எதிரிகளை வெல்ல இவ்வம்மையை வணங்குவர். தமரையும், சிங்கமும் இருக்கைகளாம்.

(படங்கள்: வலையிலிருந்து எடுக்கப்பட்டவை)
படையல்: சர்க்கரைப் பொங்கல்
துதிக்கவேண்டிய இராகம்: புன்னாக வராளி













