பிரபுலிங்க லீலை – 5.6 to 5.10
பிரபுலிங்க லீலை - 5.6
************************
நல்லாடை முதலியன புனைதல்
********************************
விலைவரம் பறியா ஆடை விரித்துடுத் தரையி லங்க
மலைவரும் புதிய சந்தம் மான்மதங் காத நாறக்
கலைவரம் பறிந்து ளோர்தங் கருத்தினுக் கரிதா யென்புன்
தலைவருங் கமலப் பொற்றாள் தம்பிரான் மலியச் சாத்தி.
விலை வரம்பு - விலையின் எல்லை.
அரை இலங்க - இடுப்பு விளங்க.
கலை வரம்பு - அறிவு நூல் எல்லை.
புன் தலை - இழிந்த தலை.
மலியச் சாத்தி - நிறையப் பூசி.
விலைகூற இயலாத ஆடையை விரித்து உடுத்தி, இடுப்பில் சந்தனம் கத்தூரி கலந்து பூசி, இழிந்த தலையை அழகுபடுத்தி கலைகளி வரம்பை அறிந்தவர்தம் கருத்தினுக்கெட்டாதபடி அலங்காரம் செய்தார், அல்லமன்.
பிரபுலிங்க லீலை - 5.7
**********************
தலையில், மாலை, தலைப்பாகை அணிதல்
********************************************
தளிர்த்ததண் பொழிலில் தேமாந் தடஞ்சினைக் குயில்மு கம்போல்
துளித்தலை முகில்க வற்றுஞ் சுரிகுழற் சிகழி ஆர்த்திட்
டளித்தொடர் மாலை வேய்ந்தவ் வலங்கனோக் குறுவோர்க் கெல்லாம்
வெளிற்றுரைப் பொருள்போல் தோன்ற மென்தலைச் சாத்த ணிந்து.
தளிர்த்த - துளிர்த்த.
தேமாந் தடஞ்சினை - இனிய மாமரத்தினது பெரிய கிளை. துளித்தலை முகில் - மழைத் துளியைத் தன்னிடத்தே கொண்ட மேகம்.
கவற்றும் - வருத்தும்.
சுரி குழல் - சுருண்ட தலைமயிர்.
சிகழி ஆர்த்திட்டு - முடியாகக் கட்டி.
அளித்தொடர் மாலை - வண்டுகள் தொடருகின்ற மாலை.
தலைச் சாத்து - தலைப்பாகை.
மழைத் துளியைத் தன்னிடத்தே கொண்ட மேகம் பொண்ற கரிய சுருண்ட தலைமுடியை முடியாகக் கட்டி, வண்டுகள் மொய்க்கும் மலர்களால் கட்டப்பட்ட மாலைதனை சுருட்டி தலைப்பாகைபோல் அணிந்து, குயில்முகம்போலத் தலைமயிரைக் கொண்டையாகக் கட்டினார், அல்லமன்.
பிரபுலிங்க லீலை - 5.8
***********************
நெற்றியிற் பொட்டிட்டுக் குண்டலம் அணிதல்
********************************************
களத்திடை இருப்பின் உண்மை காண்குவர் என்ன ஆலம்
குளத்திடை வாங்கி வைத்த கொள்கைபோல் திலதந் தீட்டி
ஒளித்தனி மனிதன் பாங்கர் உரோணியோ டொருபெண் கூட்டி
அளித்துற வைத்த தென்ன அணிமணி செவிக்க ணிந்து.
களம் - கழுத்து.
ஆலம் - நஞ்சு.
குளம் - நெற்றி.
திலதம் - பொட்டு.
தனி மதி - ஒப்பற்ற திங்கள்.
வாங்கி - எடுத்து.
கொள்கை - செய்கை.
அளித்து - அருள் செய்து.
நஞ்சு வண்ணப் பொட்டிட்டு, திங்கள் உரோகணியோடு மற்றுமொரு பெண்ணைச் சேர்த்து இரண்டு பக்கங்களிலும் வைத்தாற் போன்றிருந்த காதணியையும் அணிந்தார், அல்லமன்.
நெற்றிப் பொட்டுக் கழுத்திலுள்ள நஞ்சக் கருமையைப் போன்றது. காதுக்குண்டலங்களோ, திங்கள் உரோகணியோடு மற்றுமொரு பெண்ணைச் சேர்த்து இரண்டு பக்கங்களிலும் வைத்தாற் போன்றிருந்தது.
பிரபுலிங்க லீலை - 5.9
************************
பலவகை அணிகலன்கள் சூடுதல்
*********************************
விலையில்வெண் தரளக் கோவை வீரசங் கிலிகே யூரம்
இலகுசெம் மணிப்பொன் னாழி யிவைமுத லாய எல்லாக்
கலனுமொண் கவினெ னுஞ்செங் கனலிற்பெய் நறுநெ யென்ன
மலைவினங் குருகு கேசன் வயங்குறுப் பெலாம ணிந்து.
கேயூரம் - தோளணி.
ஆழி - விரலணி.
மலைவு இல் - எதனினும் மயங்குதல் இல்லாத.
விலையில்லா வீரசங்கிலி, தோளணி, விரலணி ஆகிய அணிகலன்களையும் அணிந்தார் அல்லமன். அழகுமிக்க அல்லமதேவர் அணிகலன்களையும் அணிந்தது, நன்றாக எரிந்துக் கொண்டுள்ள தீயில் நெய்யையும் ஊற்றினாற் போன்றிருந்தது.
பிரபுலிங்க லீலை - 5.10
************************
முதுகில் மத்தளம் தாங்குதல்
****************************
இந்திர திருவிற் கேற்ற இலக்கணம் முழுதும் வாய்த்த
சுந்தர குமரற் காவா இதனைத்தான் சுமப்ப தாக
வந்துள தெதுகொ லோவென் றெண்ணிமா னிடர்ம யங்க
நிந்தையின் முதுகின் பால்தண் ணுமை யொன்று நிகழத் தாங்கி.
இந்திர திருவிற்கு ஏற்ற - தேவர்கோனுடைய செல்வத்தை நுகருதற்குத் தக்க.
ஆஆ - அந்தோ அந்தோ.
வந்துளது - வந்துள்ள தீவினை.
நிந்தை இல் - பழிப்பற்ற. தகுதியின்மை யணி.
தண்ணுமை - மத்தளம்.
தேவர்கோனுடைய செல்வத்தை நுகருதற்குத் தக்க தகுதி வாய்ந்த அழகிய அல்லமர், தன் முதுகின்மீது மத்தளம் ஒன்றைச் சுமந்தார்.










