விவேகம்
விவேகம்
*********
ஒரு காட்டில் ஒரு முனிவர் ஆசிரமம் அமைத்துத் தன் துணைவியாரோடு வாழ்ந்துவந்தார். காட்டின் அருகாமையில் இருந்த ஊரிலிருந்து மூன்றுபேர் அம்முனிவரின் சீடர்களாகிவிடவேண்டும் என்னும் எண்ணத்துடன் ஆசிரமத்திற்கு வந்தனர்.

முனிவர் அவர்களை நோக்கி,”இன்று போய் நாளை வாருங்கள்” என்றார். பின்னர் தம் துணவியாரை அழைத்து, நாளை இவர்கள் வந்ததும்,”என் காதில் ஓணான் புகுந்து நான் இறந்துவிட்டேன்எனச் சொல்” என்றார். பொழுது விடிந்ததும், அதிகாலையில் அம்மூவரும் வந்தனர். துணைவியாரும் அவர்களை நோக்கி,”முனிவரின் காதில் ஓணான் புகுந்து அவர் இறந்துவிட்டார்” என்று சொன்னார். முதலாமவனோ,”முனிவருக்கு மாரகச் சனி. அதனால்தான் மரணமடைந்துவிட்டர்” எனச் சொல்லித் திரும்பிப் போய்விட்டன்.
இரண்டாமவனோ,”இல்லை. இல்லை. முனிவரின் முன்வினைப் பயன். அவர் இறந்துவிட்டார்” எனக் கூறித் திரும்பிவிட்டான்.
ஆனால், மூன்றாமவனோ, துணைவியாரின் முகத்தை உற்று நோக்கிவிட்டு,”முனிவர் இறக்கவில்லை. உயிரோடு உள்ளேதான் இருக்கிறார்” என அடித்துச் சொன்னான்.
உள்ளிருந்து வெளிவந்த முனிவர்,”எப்படிச் சொன்னாய்?” எனக் கேட்க, “தங்களின் இறப்பால் வரக்கூடிய துக்கம் அம்மையின் முகத்தில் துளிகூட இல்லை. அடுத்துக் காதில் ஓணான் நுழைவது நடக்க இயலாத ஒன்று. அதனால்தான் தாங்கள் இறக்கவில்லை” என்றான். அவனின் விவேகத்தை மெச்சி அவனை மட்டும் சீடனாக ஏற்றுக்கொண்டார் முனிவர்.










