வாழ்வைப் பிளக்கும் கோடரி
விவேக சிந்தாமணி – 2.54
***********************************
கோபத்தாற் கெளசிகன் றவத்தைக் கொட்டினான்
கோபத்தா னகுடனுங் கோல மாற்றினான்
கோபத்தா லிந்திரன் குலிசம் போக்கினான்
கோபத்தா லிறந்தவர் கோடி கோடியே.
கெளசிகன் – விசுவாமித்திரன்
நகுடன் – சந்திர வம்சத்து அரசன்
குலிசம் – வச்சிராயுதம்
விசுவாமித்திரன் கோபப்பட்டு வசிட்டரோடும் இன்னும் மற்றவரிடத்தும் சண்டையிட்டு, சாபமிட்டுத் தான் சேர்த்து வைத்திருந்த தவ வல்லபத்தை(வலிமை) இழந்தான். சந்திர வமிசத்து அரசனான நகுடன் நூறு அசுவமேத யாகங்களைச் செய்து இந்திர பதவியை அடைந்த பின் முனிவர்களிடம் தன் கோபத்தைக் காட்டியதால் அகத்தியரின் சாபம் பெற்று இந்திர பதவியை இழந்து பாம்பாக மாறிவிட்டான். ஒரு காலத்தில் இந்திரன் சினமிகக் கொண்டு உக்கிர பாண்டியரோடு போரிட்டுத் தன் வச்சிராயுதத்தை இழந்தான். இதன்றிக் கோபத்தால் உயிர் இழந்தவர்கள் கணக்கற்றவர்களாம். கோபமே வாழ்வைப் பிளக்கும் கோடரி. துன்பமற்ற வாழ்வு வாழ கோபத்தை விட்டொழிக்க வேண்டும்.
Posted: July 6th, 2010 under தமிழமுது, விவேக சிந்தாமணி.
Comments: 2
Comments
Comment from dhana
Time: August 14, 2010, 8:37 pm
ஐயா,
நீங்கள் சொல்லியுள்ள பல கருத்துக்களை நடைமுறையில் செய்து பார்க்க வேண்டும் என்ற ஆவல் எனக்கு உண்டு. ஆனால் கடவுள் கதைகளை உதாரணத்திற்க்கு கூறும் போது என்னால் அவற்றொடு ஒன்றிணைய முடிவதில்லை. ஏனெனில் கடவுள் கதைகளில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. இடத்திற்கேற்ப்ப அவற்றை பயண்படுத்திக் கொள்ளும் முறைதான் நமக்கு கற்ப்பிக்கப் பட்டிருக்கின்றது. உழைப்பை விரும்பாத ஒரு சமூகத்தார் தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள பயண்படுத்திய உக்தி என்பதே என் கருத்து. இது வெறும் செவி வழி செய்தியோ, வாய் வழி செய்தியோ அல்ல. பல ஆராய்சிகள் நடைபெற்றுள்ளன.
தங்களது இந்த கட்டுரையில் கூட கோபத்தால் இந்திர பதவியை இழந்து விட்டான் என்று கூறியுள்ளீர்கள், அதேபோல் தருமர்களுக்கு கோபம் வந்திருக்கா விட்டால் மகாபாரதம் நடந்திருக்காது, அர்ச்சுனன் அமைதியாகவே இருந்திருந்தால் பகவத் கீதை பலனற்றது என்றாகியிருக்கும்.
உண்மையில் கோபம் உடலுக்கு நல்லதல்ல என்பது மேலான கருத்து என்றாலும், கடவுளர் கதைகளை சேர்க்கும் போது கடவுள் பற்றிய பல பிதற்றல்களில் இதுவும் ஒண்றாகி விடுவது போலாகிறது.
இவை முழுதும் எனது கருத்துக்களே… பிறரை மதிப்பீடு செய்வதற்க்கல்ல.
Comment from ஞானவெட்டியான்
Time: August 15, 2010, 9:32 am
அன்பு dhana,
//ஆனால் கடவுள் கதைகளை உதாரணத்திற்க்கு கூறும் போது என்னால் அவற்றொடு ஒன்றிணைய முடிவதில்லை. ஏனெனில் கடவுள் கதைகளில் பல முரண்பாடுகள் காணப்படுகின்றன. இடத்திற்கேற்ப்ப அவற்றை பயண்படுத்திக் கொள்ளும் முறைதான் நமக்கு கற்ப்பிக்கப் பட்டிருக்கின்றது.//
கதைகளைக் கதைகளாகவே புறந்தள்ளுங்கள். அதில் உள்ள கருத்துக்களை எடுத்துக்கொள்ளுவதில் என்ன சிக்கல்.
//உழைப்பை விரும்பாத ஒரு சமூகத்தார் தமது நிலையை தக்க வைத்துக் கொள்ள பயண்படுத்திய உக்தி என்பதே என் கருத்து. இது வெறும் செவி வழி செய்தியோ, வாய் வழி செய்தியோ அல்ல. பல ஆராய்சிகள் நடைபெற்றுள்ளன.//
உழைப்போ செயலோ இன்றி அடுத்த அறிவைப் பெற இயலாது. அநுபவம் கிட்டாது. உணர்வு புரியாது.
//தங்களது இந்த கட்டுரையில் கூட கோபத்தால் இந்திர பதவியை இழந்து விட்டான் என்று கூறியுள்ளீர்கள், அதேபோல் தருமர்களுக்கு கோபம் வந்திருக்கா விட்டால் மகாபாரதம் நடந்திருக்காது, அர்ச்சுனன் அமைதியாகவே இருந்திருந்தால் பகவத் கீதை பலனற்றது என்றாகியிருக்கும். //
என் கட்டுரை அல்லவே! விவேக சிந்தாமணி நீதி நூல். அதன் பொருளைத்தான் நான் விளக்கியுள்ளேன்.
//உண்மையில் கோபம் உடலுக்கு நல்லதல்ல என்பது மேலான கருத்து என்றாலும், கடவுளர் கதைகளை சேர்க்கும் போது கடவுள் பற்றிய பல பிதற்றல்களில் இதுவும் ஒண்றாகி விடுவது போலாகிறது. //
இல்லை. இல்லை. எப்பொழுதும் கோபம் உடலுக்கு நல்லதல்ல. அதுவே கருத்து. அதாவது கரு.
//இவை முழுதும் எனது கருத்துக்களே… பிறரை மதிப்பீடு செய்வதற்க்கல்ல.//
சிந்தனை செய் மனமே! இறைவன், உருவம் ஆகியவை மனிதனின் கற்பிதமே!


Write a comment