பிரபுலிங்க லீலை-1.6
வசவேசர்
***********
6. வெள்ள வேணிப் பெருந்தகைக்கு
…………..யாஞ்செய் அடிமை மெய்யாகக்
கள்ள வேடம் புனைந்திருந்த
………….கள்வரெல்லாங் களங்கமறும்
உள்ள மோடு மெய்யடியா
………….ராக உள்ளத் துள்ளுமருள்
வள்ள லாகும் வசவேசன்
…………மலர்த்தாள் தலையால் வணங்குவாம்.
கங்கையைத் தலையில் அணிந்த இறைவனுக்கு தாம் செய்த தொண்டின் பயனால் கிட்டிய அருட்கொடையால் தன் உள்ளத்தில், “கள்ளர் வேடம் புனைந்திருந்த கள்வரெல்லாம் குற்றமற்ற உள்ளத்தோடு மெய்யடியாராகவும் உண்மைத் தொண்டராகவும் ஆகுக” என எண்ணியவுடனே, அங்ஙனமே மாற்றிய வள்ளலாம் வசவேசரின் மலர்ப்பாதத்தைத் தலையால் வணங்குவோம்.










