கந்தர் கலிவெண்பா – 22
ஈறு முதலும்அகன் றெங்குநிறைந்(து) ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினாற் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ
பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துட் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள்
ஐந்தொழிலு மோவாதளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாதமணி முரசும் -சந்ததமும்
குரகதம் = குதிரை
ஏறுமதம் = உயர்ந்த சமயம்
களித்தோர் = மகிழ்ந்தவர்கள்
துதிக்கையினால் = வாழ்த்துவதால்
பஞ்ச மலம் = ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்)
காய்ந்த = ஒழித்த
சுடாக் களிறு = மதயானை
பூரணமாம் = முற்றறிவாகிய
மலரா = பூவாக
நார் = அன்பு
தொடை = மாலை
காரணத்துள் = காரியப்படுவதற்கு முற்பட்ட நிலையில்
வான்கொடி = பெரியகொடி, பரமாகாயமாகிய கொடி
நவ நாத = புது ஒலியுள்ள, புதுமை பயக்கும் நாத தத்துவம்
மணி = அழகிய
முரசும் = நாத தத்துவமாகிய முரசும்
முதலும் முடிவும் இல்லாது, எங்கும் நிறைந்த இறைவன் ஐந்தெழுத்து மந்திரமாகிய சொல்லால் செலுத்தக்கூடிய
குதிரையும், உயர்ந்த சமய நெறியில் ஒழுகி மகிழ்ச்சியடைந்த அன்பர்களுடைய வாழ்த்துக்களாம் தும்பிக்கையினால் ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்) ஆகிய ஐந்து பாசங்களையும் தொலைத்த சிவஞானமாகிய மத யானையும், எல்லாம் அறியும் அறிவுக்கும் அறிவாகிய புது மலரை உள்ள அன்பென்னும் நாரினால் கட்டிய பூமாலையும் (வெளிப்படையான பஞ்ச கிருத்தியத்திற்குக்) காரணமான ஐந்தொழிலையும் எப்போதும் செய்வதற்கு ஏதுவாகிய சத்தியாகிய பெரிய கொடியும், எப்போதும் புதுமையாயுள்ள ஓங்காரமாகிய அழகிய முரசும் …….
Posted: February 5th, 2010 under கந்தர் கலிவெண்பா, கெளமாரம், பக்தி.
Comments: none


Write a comment