திருவெம்பாவை – 20
நாள் இருபது – பாடல் இருபது
போற்றி அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி அருளுக நின் அந்தமாம் செந்தளிர்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் தோற்றமாம் பொற்பாதம்
போற்றி எல்லா உயிர்க்கும் போகமாம் பூங்கழல்கள்
போற்றி எல்லா உயிர்க்கும் ஈறாம் இணையடிகள்
போற்றி மால் நான்முகனும் காணாத புண்டரிகம்
போற்றியாம் உய்யஆட் கொண்டருளும் பொன்மலர்கள்
போற்றியாம் மார்கழிநீர் ஆடேலோர் எம்பாவாய்.
திருவெம்பாவையின் இறுதிப் பாடலாக அமைந்த இருபதாம் பாடலில் எங்களைப் பாதுகாப்பாயாக என்பது பிரார்த்தனையாக அமைகிறது.
எல்லா உயிர்க்கும் ஆதியும் அந்தமும், தோன்றும் இடமும், போகங்கள் விளையும் களமும், முடிவான இடமுமாய் இருப்பவை இறைவன் திருவடிகள். பிரமனும் இந்திரனும் காண முடியாத பெருமை பெற்றவை. அந்தத் திருவடிகளே தம்மை ஆட்கொள்ளும் பொன்னடிகள். அதைப் போற்றி மார்கழி நீர் ஆடுவாய்.
இப்பாடல் இறைவனின் ஐந்தொழில்களையும் குறிக்கிறது; திருவெம்பாவையின் நிறைவுப் பாடலாக மங்கலப் போற்றியாக அமைகிறது. ஐந்தொழிலும் அறுவகைக் காவலும் எட்டுப் போற்றிகளும் தனக்குள்ளே கொண்டது இப்பாடல்.
இந்தப் பாடல் இறைவனுக்குத் தம்மை ஒப்புக் கொடுத்துவிட்டுச் சரணடைந்து விடுவதைப் பற்றிப் பேசுகிறது. தோன்றியது இறைவனிடமிருந்து. வாழ்வது அவனால். உடலெடுத்த வாழ்விலிருந்து நீக்கப்படுவதற்கு எதிர்நோக்கிக் கிடப்பது அவன் அருளையே. என்னதான் முயன்றாலும் இன்னார்தான் என்று தெரிந்து கொள்ள முடியாத அளவுக்கு வடிவிலும் செயலிலும் அருமை கொண்டவன். அவனையல்லால் வேறு யாரிடம் சரணடைவது? எனவே இப்பாடல் அவன்தாள் சரணடைவதைப் போற்றி முடிகிறது.










