ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

பிரபுலிங்க லீலை – 2.44

2.44 படிகொள் மாமுடிக் கங்கணத் திறைபதம் படுமொண்
முடிகள் யாவையும் படுகழல் நந்தியம் முதல்வன்
அடிகள் ஏந்துகை யுறவடித் தொதுக்கியவ் வவையைக்
கடிகொள் மாலையம் பிரம்பொடு திரிந்தனன் களித்து.

படி – நிலம்.
பதம்படு – திருவடிகளிலே படுகின்ற,
ஒண்முடி – ஒளிபொருந்திய மணிமுடிகள்.
கழல்-அடி.
கடிகொள் – நன்மணத்தைக் கொண்ட.
படிகொள் மாமுடிக் கங்கணத்து இறை – பூமியைத் தாங்கிய பெரிய தலையையுடைய ஆதிசேடனாகிய பாம்புக் கங்கணத்தையுடைய இறைவன் (சிவன்.)

நந்திதேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல்

இறைவன் நிலவுலகைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்பையே காப்பாக அணிந்தவர். அத்தகைய இறைவனை வணங்கவருவார் அனைவரும் நந்திதேவரையும் வணங்குவர். ஆதலால், இறைபதம்படும் ஒண்முடிகள் யாவையும் படுகழல் நந்தி என்றார். அத்தகைய நந்தி பிரான் கையில் பிரம்பெடுத்து அவையில் கூடியுள்ளோரை ஒழுங்கு படுத்தினர்.

கந்தர் கலிவெண்பா – 22

ஈறு முதலும்அகன் றெங்குநிறைந்(து) ஐந்தெழுத்தைக்
கூறி நடாத்தும் குரகதமும் – ஏறுமதம்
தோய்ந்து களித்தோர் துதிக்கையினாற் பஞ்சமலம்
காய்ந்த சிவஞானக் கடாக்களிறும் – வாய்ந்தசிவ
பூரணத்துட் பூரணமாம் போதம் புதுமலரா
நாரகத்துட் கட்டு நறுந்தொடையும் – காரணத்துள்
ஐந்தொழிலு மோவாதளித்துயர்ந்த வான்கொடியும்
வந்தநவ நாதமணி முரசும் -சந்ததமும்

குரகதம் = குதிரை
ஏறுமதம் = உயர்ந்த சமயம்
களித்தோர் = மகிழ்ந்தவர்கள்
துதிக்கையினால் = வாழ்த்துவதால்
பஞ்ச மலம் = ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்)

காய்ந்த = ஒழித்த
சுடாக் களிறு = மதயானை

பூரணமாம் = முற்றறிவாகிய
மலரா = பூவாக
நார் = அன்பு
தொடை = மாலை
காரணத்துள் = காரியப்படுவதற்கு முற்பட்ட நிலையில்
வான்கொடி = பெரியகொடி, பரமாகாயமாகிய கொடி

நவ நாத = புது ஒலியுள்ள, புதுமை பயக்கும் நாத தத்துவம்
மணி = அழகிய
முரசும் = நாத தத்துவமாகிய முரசும்

முதலும் முடிவும் இல்லாது, எங்கும் நிறைந்த இறைவன் ஐந்தெழுத்து மந்திரமாகிய சொல்லால் செலுத்தக்கூடிய
குதிரையும், உயர்ந்த சமய நெறியில் ஒழுகி மகிழ்ச்சியடைந்த அன்பர்களுடைய வாழ்த்துக்களாம் தும்பிக்கையினால் ஆணவம், வினை, மாயை, திரோதாயி(மறைப்பு), மாயேயம்(மாயாவுலகம்) ஆகிய ஐந்து பாசங்களையும் தொலைத்த சிவஞானமாகிய மத யானையும், எல்லாம் அறியும் அறிவுக்கும் அறிவாகிய புது மலரை உள்ள அன்பென்னும் நாரினால் கட்டிய பூமாலையும் (வெளிப்படையான பஞ்ச கிருத்தியத்திற்குக்) காரணமான ஐந்தொழிலையும் எப்போதும் செய்வதற்கு ஏதுவாகிய சத்தியாகிய பெரிய கொடியும், எப்போதும் புதுமையாயுள்ள ஓங்காரமாகிய அழகிய முரசும் …….

கந்தர் கலிவெண்பா – 21

வரும்அட்ட மூர்த்தமாம் வாழ்வேமெய்ஞ் ஞானம்
தருமட்ட யோகத் தவமே – பருவத்(து)
அகலாத பேரன் படைந்தோ ரகத்துட்
புகலாகு மின்பப் பொருப்பும் – சுகலளிதப்
பேரின்ப வெள்ளப் பெருக்காறு மீதானந்
தேரின்ப நல்குந்திருநாடும் – பாரின்பம்
எல்லாங் கடந்த இருநிலத்துட் போக்குவர(வு)
அல்லா துயர்ந்த அணிநகரும் – தொல்லுலகில்

அட்டமூர்த்தம் = எட்டு வடிவம்
எட்டு வடிவம் = நிலம், நீர், தீ, காற்று, வான், சூரியன், சந்திரன், உயிர்
அட்ட யோகம் = எட்டு வகை யோக முறைகள், மூச்சுப்பயிற்சி
புகல் = ஆதரவு
பொருப்பு = மலை
லளிதம் = எளிதாகிய தன்மை, அழகு
மீதானம் = மேலிடம் (தத்துவங்களுக்கெல்லாம் மேலாகிய நிலை)
போக்குவரவு = பிறப்பு இறப்பு
அணிநகர் = அழகிய நிலை (இறையின்பம் தலைப்படும் உயர் நிலை)

தான் பொருந்தியதனால் தனக்கு வடிவமாகும் நிலம், நீர், தீ, காற்று, வான், சூரியன், சந்திரன், உயிர் எனும் எட்டு திருமேனியோடு வாழும் பெம்மானே!

மெய்யான(உண்மையான) ஞானத்தைக் கொடுக்கக்கூடிய எட்டு வகை யோகங்களால் பெறக்கூடிய தவப்பொருளே!

பக்குவம் கிட்டும்போது இறைவனை நீங்காத பேரன்பினால் வழிபடுவோர்தம் உள்ளத்தை இடமாகக் கொண்ட பேரின்பமாகிய மலையும், கெடுதியில்லா பேரழகு வாய்ந்த இறைவனின் திருவுருவக் காட்சியில் எழும் பேரின்பப் பெருக்காகிய ஆறும், தத்துவங்கள் எல்லாம் கடந்த பரவெளியாகிய ஆராய்ந்து பெறக்கூடிய இன்பத்தைக் கொடுக்கும் அழகிய நாடும், உலகியல் இன்பங்கள் எல்லாவற்றையும் கடந்த மேலான வீடுபேறுலகில் பிறப்பு இறப்பு அற்ற நிலையாகிய அழகிய அரச நகரமும், பழமையாகிய உலகில்…..