ஞானவெட்டியான்
திண்டுக்கல்
தமிழகம்


Main menu:

Site search

Meta

Categories

Tags

"அ"காரம் Add new tag அசபை அநுமன் அன்பு அம்மை அரன் அருள் அறிவு ஆன்மா இரேசகம் ஓங்காரம் ஓரெழுத்து கடமை கடவுள் கரு கருத்து கலை கல்வி கவலை காயம் கும்பகம் குரு குறள் குறவஞ்சி குலம் கைலைமலை சிவம் சூபித்துவம் சோதிடம் ஞானம் ஞானவெட்டியான் நவராத்திரி நாடிகள் நாதவிந்து நினைவு பக்தி பஞ்சபட்சி சாற்றிறம் பிண்டம் மதம் மனம் முருகன் வாசி வாயு விந்து

Archives


Listed in tamizmaNam.com, where bloggers and readers meet :: தமிழ்மணம்.காம்-ல் பட்டியலிடப்பட்டு, திரட்டப்படுகிறது

என்னவாயிற்று?

கந்தர் கலிவெண்பா – 26 என்னவாயிற்று?

கந்தர் கலிவெண்பா – 26

26. முகத்தி லணைத்துச்சி மோந்து முலைப்பால்
அகத்துண் மகிழ்பூத் தளித்துச் – சகத்தளந்த
வெள்ளை விடைமேல் விமலன் கரத்திலளித்(து)
உள்ள முவப்ப உயர்ந்தோனே – கிள்ளைமொழி
மங்கைசிலம்பின் மணியொன் பதிற்றோன்றும்
துங்க மடவார் துயர்தீர்ந்து – தங்கள்
விருப்பா லளித்தநவ வீரருக்குள் முன்னோன்
மருப்பாயும் தார் வீரவாகு – நெருப்பிலுதித்து

சகத்தளந்த – உலகம் அளந்த திருமால்

கிள்ளை – கிளி

மங்கை – உமாதேவி

மணியொன்பது – சிலம்பிலுள்ள நவரத்தினங்கள்

துங்கம் – சிறந்த

மடவார் – ஒன்பது துணைச் சத்திகள்(ஒன்பது மணியின் பெயர் பெற்றவர்கள்)

நவவீரர் – ஒன்பது வீரர்கள்(வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர்,
வீரமகேசுரர், வீரபுரந்தரர், வீரராட்சசர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர்

மரு – மணம்

…….தலையை உச்சிமோந்து முத்தம் கொடுத்து, தனது திருமுலைப்பாலை உள்ளத்தில் உண்டான தாய்ப்பாசத்தோடு கொடுத்து, உலகைத் தன் திருவடியால் அளந்த திருமாலாகிய வெள்ளைக் காளைமீது ஏறிவரும் குற்றமற்ற சிவபிரானின் திருக்கையில் குழந்தையைக் கொடுத்தபோது, அப்பெருமான் மனமகிழ்வதற்குக் காரணமாக இருந்த அண்ணலே!

கிளியின் சொல்போல சொல்லையுடைய உமையம்மையின் திருக்காலில் இட்ட சிலம்பிலுள்ள ஒன்பது இரத்தினங்களிலிருந்து தோன்றிய சிறந்த பெண்கள்பால் அவர்களின் துன்பம் நீங்கி மகிழ உதித்த வீரவாகு, வீரகேசரி, வீரமகேந்திரர், வீரமகேசுரர், வீரபுரந்தரர், வீரராட்சசர், வீரமார்த்தாண்டர், வீராந்தகர், வீரதீரர் ஆகிய ஒன்பது வீரர்களுள் முதலாயுள்ள வீரவாகுத் தேவர் (நாரதர் வளர்த்த வேள்வித்) தீயில் தோன்றி, ………..

கந்தர் கலிவெண்பா – 25

25.அன்னவளும் கொண்டமைதற் காற்றாள் சரவணத்திற்
சென்னியிற் கொண்டுய்ப்பத் திருவுருவாய் – முன்னர்
அறுமீன் முலையுண் டழுதுவிளை யாடி
நறுநீர் முடிக்கணிந்த நாதன் – குறுமுறுவற்
கன்னியொடுஞ் சென்று (அ)வட்குக் காதலுருக்காட்டுதலும்
அன்னவள்கண் டவ்வுருவ மாறினையுந் – தன்னிரண்டு
கையா லெடுத்தணைத்துக் கந்தனெனப் பேர் புனைந்து
மெய்யாறு மொன்றாக மேவுவித்துச் – செய்ய

அன்னவள் = கங்கை
சரவணத்தில் = சரவணப் பொய்கையில்
சரவணம் = நாணல்

சென்னி = தலை, நாணல் முனை
திருவுருவாய் = திருவடிவு எடுத்து

அறுமீன் = ஆறு நற்சேத்திரப் பெண்களாகிய கார்த்திகைப் பெண்டிர்

நறுநீர் = கங்கை
குறுமுறுவல் = புன்சிரிப்பு

கன்னி = உமையம்மை(உலகையெல்லாம் பெற்றாலும் இறைவி கன்னியே என ஞான நூல்கள் கூறும்)

கந்தன் = ஒன்று சேர்க்கப்பட்டவன்
மெய் = உடல்
மேவுவித்து = பொருத்தப்பட்டு
செய்ய = சிவந்த

கங்கையும் அப்பொறிகளின் சூட்டைப் பொறுக்க இயலாது, நாணல் நிறைந்த சரவணப் பொய்கையில் அவற்றை வைத்தனர். அப்போது அவை ஆறு திரு உருவங்களாக மாறி முதலில் கார்த்திகைப் பெண்டிர் கொடுத்த திருமுலைப் பாலை உண்டு அழுது விளையாடும்போது நறுமணமுடைய கங்கையைச் சடைமுடியில் தரித்த சிவபிரான், புன்சிரிப்புடைய கன்னியாகிய உமையம்மையுடன் சென்று குழந்தையைப் பார்த்து அன்பு செலுத்துதற்குரிய பிள்ளைத் திருவடிவத்தை அம்மைக்குக் காட்டவும், அவள் ஆறு திருவுருவத்தையும் தன் இரு கைகளால் எடுத்துத் தழுவி ஒன்று சேர்த்து ஓர் உருவாக்கி, “கந்தன்” (சேர்க்கப்பட்டவன்) என்னும் திருப்பெயரையும் தந்து அத்திருவுருவைச் செம்மாயான தன் திருமுகத்தோடு சேர்த்து………

“சேயவன் வடிவம் ஆறுந் திரட்டி யொன்றாகச் செய்தாய் – ஆயதனாலே கந்தனாம்மெனு நாமம் பெற்றான்” – என்கிறது கந்த புராணம்