பிரபுலிங்க லீலை – 2.44
2.44 படிகொள் மாமுடிக் கங்கணத் திறைபதம் படுமொண்
முடிகள் யாவையும் படுகழல் நந்தியம் முதல்வன்
அடிகள் ஏந்துகை யுறவடித் தொதுக்கியவ் வவையைக்
கடிகொள் மாலையம் பிரம்பொடு திரிந்தனன் களித்து.
படி – நிலம்.
பதம்படு – திருவடிகளிலே படுகின்ற,
ஒண்முடி – ஒளிபொருந்திய மணிமுடிகள்.
கழல்-அடி.
கடிகொள் – நன்மணத்தைக் கொண்ட.
படிகொள் மாமுடிக் கங்கணத்து இறை – பூமியைத் தாங்கிய பெரிய தலையையுடைய ஆதிசேடனாகிய பாம்புக் கங்கணத்தையுடைய இறைவன் (சிவன்.)
நந்திதேவர் கூட்டத்தை ஒழுங்குபடுத்தல்
இறைவன் நிலவுலகைத் தாங்கும் ஆதிசேடன் என்னும் பாம்பையே காப்பாக அணிந்தவர். அத்தகைய இறைவனை வணங்கவருவார் அனைவரும் நந்திதேவரையும் வணங்குவர். ஆதலால், இறைபதம்படும் ஒண்முடிகள் யாவையும் படுகழல் நந்தி என்றார். அத்தகைய நந்தி பிரான் கையில் பிரம்பெடுத்து அவையில் கூடியுள்ளோரை ஒழுங்கு படுத்தினர்.
Posted: February 7th, 2010 under தமிழமுது, பிரபுலிங்க லீலை.
Comments: 2
